Tamilnadu

மீண்டும் தொடங்கியது பொது போக்குவரத்து : டீலக்ஸ் பேருந்துகள் மூலம் கல்லா கட்ட திட்டமிடும் எடப்பாடி அரசு!

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. இந்த நடைமுறை நோய் பரவல் அதிகம் உள்ள மாநிலங்களைத் தவிர சில பகுதிகளில் மட்டும் அங்கும் இங்குமாய் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

அவ்வகையில், தமிழகத்தில் நோய் பரவல் தினந்தோறும் தீவிரமடைந்து வருவதால் கடந்த 5 மாதங்களாக முற்றிலும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று முதல் மாவட்டங்களுக்குள்ளே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

அதன்படி, சென்னையில் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்காக இன்று பேருந்துகள் இயங்கத் தொடங்கின. வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக தற்போது கொரோனாவுடன் வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் மக்கள் மீண்டும் ஓடத் தொடங்கி விட்டனர்.

இன்று முதல் பொது பேருந்து போக்குவரத்து தொடங்கிய நிலையில் காலை 6 மணி முதல் சென்னை சாலைகளில் சிவப்பு டீலக்ஸ் பேருந்து மட்டுமே உலா வந்துகொண்டிருக்கிறது. டாஸ்மாக்கில் வசூலை அள்ளியது போல 5 மாதங்களாக வருமானம் இல்லாமல் இருந்த மாநகர பேருந்து போக்குவரத்து கழகம் அதிக வருமானம் ஈட்ட சாமானிய மக்களின் தலையில் கைவைத்துள்ளது.

ஏனெனில், சென்னையில் இன்று இயக்கப்பட்ட 100 பேருந்துகளில் 5 பேருந்துகள் மட்டுமே வெள்ளை பலகை கொண்ட சாதாரண பேருந்துகள் ஆகும். மற்றவை அனைத்தும் பச்சை பலகை கொண்ட விரைவு பேருந்து மற்றும் மஞ்சள் பலகை கொண்ட டீலக்ஸ் பேருந்துகள் மட்டுமே சென்னை முழுவதும் வலம் வருகிறது.

ஊரடங்கால் முடங்கிப்போயுள்ள மக்களுக்கு இந்த தளர்வுகள் சற்று ஆறுதலை கொடுத்தாலும் அரசின் நடைமுறைகள் ஏதும் பலனளிக்காத வண்ணமே உள்ளது. வேலையில்லாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மேலும் சுமையை கொடுக்கும் வகையிலேயே பெரும்பாலும் டீலக்ஸ் பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது என பயணிக்கும் மக்கள் வேதனையில் குமுறி வருகின்றனர்.

Also Read: ஒருபுறம் ஊரடங்கு தளர்வு; மறுபுறம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: பேரிடரிலும் கல்லா கட்ட துடிக்கும் மோடி அரசு