Tamilnadu

அரசு சிலைக்குத் தடை போட்டதால் விநாயகர் வேடம் போட்டு ஊர்வலம் போக முயன்ற பா.ஜ.கவினர் கைது!

இந்தியா முழுவதும் இன்று விநாயக சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால், பொது இடங்களில் விநாயகர் வைத்து வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் வீடுகளிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு வேண்டுகோள் வைத்தது. இந்நிலையில், இந்து முன்னணியினர் சிலைகளை வைத்து நிச்சயம் வழிபாடு செய்வோர் என தெரிவித்துள்ள நிலையில், காவல்துறை விநாயகர் சிலைகள் செய்யும் தொழிற் சாலைகளுக்கு சீல் வைத்து சிலைகள் வெளியே வராத அளவுக்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், காலை முதல் பொதுமக்கள் வீடுகளில் வழிபாடு செய்ய விநாயகர் வாங்கி சென்ற நிலையில், காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் உள்ள நகர பா.ஜ.க அலுவலகத்தில் அரசு மற்றும் நீதிமன்றம் உத்தரவு படி 3 அடி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு மேற்கொண்டனர். இதேபோல், இந்து முன்னணி நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் வாசலில் ஒரு அடி விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.

கடந்த மூன்று நாட்களாக காவல்துறை விநாயகர் சிலை வெளியில் வராத அளவிற்கு காவல் பணிகளை மேற்கொண்டும் சிலை வைத்து வழிபாடு செய்தது காவல்துறையினரைடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் அருகே சிறுவனை விநாயகர் வேடமிட்டு ஊர்வலமாக மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் குமார் தலைமையில் 8 பேர் அழைத்து சென்றபோது காவல்துறையால் தடுக்கப்பட்டு கைது செய்துள்ளனர்.

அதேப்போல், தென்காசி மற்றும் கோவையில் விஷ்வ இந்து பரிஷத், இந்து முன்னனி சார்பில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த 7 சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Also Read: தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு - சென்னையில் பதற்றத்தை உருவாக்கிய பா.ஜ.க!?