Tamilnadu

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ மனுவில் திருப்தியில்லை; முழு விசாரணை அறிக்கை தேவை - ஐகோர்ட் மதுரை கிளை

சிபிஐ தொடர்புடைய வழக்குகளில் மாவட்ட நீதிமன்றத்தில் எப்படி ஜாமீன் கோரி தாக்கல் செய்ய இயலும் என்று சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்- காவலர் முருகன் ஜாமீன் வழங்கக் கோரிய மனு விசாரணையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை மாவட்டம் கண்ணன்குளத்தைச் சேர்ந்த முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், "சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன். சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு 8.15 மணியளவிலேயே காவல் நிலையம் வந்தேன்.

அப்போது ஜெயராஜ் பென்னிக்ஸ் மீதான புகாரில் கையெழுத்திடுமாறு உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் கட்டாயபடுத்தியதன் பெயரில், நானும் கையெழுத்திட்டேன். அதைத்தவிர வேறு எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவரிடம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார் இந்த மனு விசாரணை நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் சிபிஐ சம்பந்தமான வழக்குகளில் மாவட்ட நீதிமன்றத்தில் எப்படி ஜாமீன் கோரி தாக்கல் செய்ய இயலும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஜாமீன் கேட்ட காவலர் முருகன் வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த பதில் மனு அதிர்ச்சி அளிப்பதாகவும், திருப்தி அளிக்கவில்லை என்றும், சிபிஐ வழக்கு விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறிய நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Also Read: “ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்” -சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்!