Tamilnadu

பா.ஜ.க கொடிக் கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி அவமதித்த எல்.முருகன் - சென்னை காவல் ஆணையரிடம் புகார்!

பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தேசியக்கொடியை அவமதித்தது தொடர்பாக அவர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குகேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, பா.ஜ.க-வின் தமிழக தலைமை இடமான கமலாலயத்தில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் எல்.முருகன் தேசியக்கொடி ஏற்றினார். தேசியக் கொடியை அவமதிக்கும் நோக்கில், பா.ஜ.க கட்சி வர்ணம் பூசப்பட்ட கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த கே.ஆர்.குகேஷ் என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகார் மனுவில், பா.ஜ.க கட்சிக் கொடி ஏற்றக்கூடிய காவி மற்றும் பச்சை வர்ணம் பூசப்பட்ட கொடிக் கம்பத்தில் நமது பெருமாண்பிற்கும் மரியாதைக்குமுரிய தேசியக் கொடியை ஏற்றி வேண்டுமென்றே தேசியக்கொடியின் மாண்பைச் சிதைத்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தச் செயலினை பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, அக்கட்சி கொடியையும், நாம் வணங்கும் தேசியக் கொடியையும் ஒருமித்ததாக தீய எண்ணத்துடன் காண்பித்துள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தேசியக் கொடியை அவமதிக்கும் இந்நிகழ்வில் சட்டம் படுத்த மற்றும் கற்றறிந்த வழக்கறிஞர்களான மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், முன்னாள் அமைச்சர் இல.கணேசன் மற்றும் இச்செயல்களுக்கு உடந்தையாக இருந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மீது தேசியக் கொடியை அவமதித்ததற்காக சட்டப்படி விசாரணை மேற்கொண்டு வழக்கப்பதிவு செய்யவேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “போலி செய்திகளை பரப்ப ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை ஆட்டுவிக்கும் பா.ஜ.க” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!