Tamilnadu

“ரூ.600-க்கு ஸ்டிக்கர் ஒட்டினால் தான் ஆட்டோக்களுக்கு எஃப்.சி”: ஆட்டோ ஓட்டுநர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசு!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலையிழந்து தவித்து வரும் ஆட்டோ ஓட்டுநர்களின் இன்ஸ்யூரன்ஸ், எஃப்.சி போன்றவற்றை புதுப்பிக்குமாறு தமிழக அரசு கட்டாயப்படுகிறது.

வழக்கமாக வசூலிக்கப்படும் தொகையை விட அதிக தொகை வசூல் செய்வதால் பலர் ஆட்டோ ஓட்டும் தொழிலையே கைவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது பலர் தங்கள் ஆட்டோவை தாங்களே தீ வைத்து கொளுத்தும் சம்பவமும் தொடர்கிறது.

அந்தவகையில், கடந்த 8ம் தேதி அயனாவரம் சோலைத் தெருவைச் சேர்ந்த தாண்டமுத்து அண்ணா நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோவை ஆய்வு செய்த ஆர்.ஐ, ஆட்டோவின் இன்ஸுரன்ஸ் கடந்த 27-ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டதால், அதை புதுப்பித்துக் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக போதிய வருமானம் இல்லாததால் இன்ஸூரன்ஸ் கட்ட முடியவில்லை; ஆட்டோவை எஃப்.சி (FC) செய்து தருமாறுங்கள் இன்ஸூரன்ஸ் கட்டிவிடுகிறேன் என தாண்டமுத்து கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு ஆர்.ஐ மறுப்புத் தெரிவிக்கவே, வேறு வழியில்லாமல் தனது ஆட்டோவை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி ஏரித்துள்ளார். தனது ஆட்டோ தன் கண்முன்னே எரிந்து சாம்பளாவைதைக் கண்டு கதறி அழுத்தார் தாண்டமுத்து.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, ஆட்டோ ஒட்டுநர்கள் சந்திக்கும் பிரச்சனை தொடர்பாக பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, எப்.சி எடுக்கவரும் ஆட்டோக்களுக்கு ஒப்பந்தக்காரர் கொடுக்கும் 300 இல் இருந்து 600 ரூபாய்க்கான ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டுமே ஆட்டோக்களுக்கு எப்.சி வழங்கப்படும் என்று கட்டாயப்படுத்துவதாகவும், மேலும் இடைத்தரகர் மூலம் ரூ.625-க்கான எஃப்.சி கட்டணத்திற்கு ரூ.3500 வரை வசூலித்து கொள்ளையடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதனைக் கண்டித்து சிஐடியு, தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.சிவாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழகத்தில் ஏற்கனவே தொழில் இல்லாமல், வருமானம் இல்லாமல் வேதனையில் 50 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இயற்கைக்கு மாறான மரணத்தை தழுவியுள்ள நிலையில் அடுத்த கட்ட தாக்குதலை ஆட்டோ தொழிலாளர்கள் மீது அரசாங்கம் ஏவியுள்ளது.

யாரோ ஒருவர் பிழைக்க எப்.சி எடுக்கவரும் ஆட்டோக்களுக்கு மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என கட்டாயப்படுத்துவதை தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறது. ரூ.60 பெறுமான ஸ்டிக்கர் ரூ.300 முதல் ரூ.600 வரை ஆட்டோ தொழிலாளர்களிடம் கட்டாயப்படுத்தி கொள்ளை அடிக்கப்படுகிறது.

மேலும் காவல்துறை, கொரோனாகாலத்தில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு தெரியாமல் மின்னணு இயந்திரம் மூலம் விதிக்கப்படும் அபராதமும் கட்ட வேண்டும் எனவும், அப்போது தான் எஃப்.சி வழங்கப்படும் என ஆட்டோ தொழிலாளர்களுக்கு நெருக்கடி தருகிறார்கள். மேலும் இடைத்தரகர் மூலம் ரூ.625-க்கான எஃப்.சி கட்டணத்திற்கு ரூ.3500 வரை வசூலித்து கொள்ளையடிக்கிறார்கள்.

இவர்களின் கேடுகெட்ட நடவடிக்கையால் தான் அயனாவரம் ஆட் தொழிலாளி தனதுஆட்டோவையே தீயிட்டு கொளுத்தி யதை சுட்டிக் காட்டுகிறோம். எனவே தமிழக அரசாங்கம் எஃப்.சி எடுக்க ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக வசூலிக்க கட்டாயப்படுத்துவதை உடனடியாக தடை செய்யவேண்டும். கொரோனா காலத்தில் போடப்பட்ட அனைத்துஅபராதங்களையும் தள்ளுபடி செய்திட வேண்டும்.

ஏற்கனவே கடுமையான நெருக்கடியில் உள்ள ஆட்டோ தொழிலாளிகள் மீது அடுக்கடுக்கான தாக்குதலை அரசாங்கம் தொடுத்தால் எஃப்.சி எடுப்பதையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்து ஸ்டிக்கர் ஒட்டுவதையும், அபராதங்களை கட்டச்சொல்லி நிர்பந்திப்ப தையும் கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ரூ. 7500 வீதம் ஆறு மாத காலத்திற்கு கொரோனா நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: “அ.தி.மு.க அமைச்சர்களால் முதல்வர் வேட்பாளரைத் தீர்மானிக்க முடியாது; மோடிதான் முடிவெடுப்பார்” : முத்தரசன்