Tamilnadu

“டெல்லி அரசைப் போல எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை தேவை” - எடப்பாடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

டெல்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது டீசலுக்கான வாட் வரியை குறைத்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளதால் டீசல் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.

டெல்லியில் டீசல் மீதான வாட் வரி விகிதத்தை 30 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாக குறைத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வரி குறைப்பால் டீசல் விலை 8 ரூபாய் 36 பைசா குறையும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் டெல்லி அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மற்ற மாநில அரசுகளும் இதைப் பின்பற்ற வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வது குறித்து கேள்வி எழுப்பிவரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் காலங்களிலும் இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை அதிகரிப்பது வேதனை அளிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் டெல்லி அரசின் முடிவை வரவேற்றுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசும் எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டீசல் மீதான வாட் வரியை பாதியாக்கி டீசல் விலையை லிட்டருக்கு சுமார் ரூ. 9 குறைத்திருக்கிறது டெல்லி அரசு. வரவேற்க வேண்டிய முடிவு!

தமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பை முயற்சிக்க வேண்டும்.

மாநிலத்தில் விலைவாசி குறைய உதவும்; வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரசின் கருணையாகவும் இருக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “ஒருபுறம் ஊரடங்கு தளர்வு; மறுபுறம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு”: மக்களை வஞ்சிப்பதா?- மு.க.ஸ்டாலின் கேள்வி!