Tamilnadu

“பொது அமைதியை குலைக்க கோவையில் தொடரும் சமூக விரோதச்செயல்” - தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் கண்டனம்!

கோவையில் பொது அமைதியை குலைக்கும் வகையில் சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்கவும் , அமைதியை நிலைநாட்டவும் கோவை மாநகர காவல்துறை இரும்புக்கரம் கொண்டு , சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோவை மாநகர் தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ காவல்துறை ஆணையாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், “நேற்று 18.07.2020 , கோவை டவுன் ஹாலில் என்.எச் சாலையில் உள்ள மகாளியம்மன் கோயிலில் சூலாயுதம் உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் அருகே உள்ள கடையில் இருந்து பழைய டயர்களை எடுத்து வந்து கோயில் முன்பாக தீ வைத்து எரித்தது தெரியவந்தது. மேலும், சூலாயுதம் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோன்று ரயில் நிலையம் முன் உள்ள விநாயகர் கோயில் மற்றும் துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் செல்வ விநாயகர் கோயில்களின் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

ஏற்கனவே நேற்று அதிகாலை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் காவி சாயம் ஊற்றி காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் மர்ம நபர் ஒருவர் கோவில் முன்பு டயர்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்கவும் , கோவையில் பொது அமைதி, நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் கோவை மாநகர காவல்துறை இரும்புக்கரம் கொண்டு , இந்த சமூக விரோதிகள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வலியுறுத்திகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: கோவையில் கோவில்கள் சேதம்: பொது கவனத்தை திசை திருப்பாமல் சட்ட நடவடிக்கை தேவை - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!