Tamilnadu

ஏழைப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சூப்பர்வைசர்- பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவர் திருப்பூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வருகிறார். திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில், தனக்கு திருமணம் ஆகவில்லை எனக் கூறி அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 24 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து வந்த மாது, அந்த பெண்ணை தனிமையில் இருக்கும்போது நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் சில நாட்களில் மாதுவுக்கு திருமணம் நடந்த விசயம் அந்தப் பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

அப்போதுதான் தனது குரூர குணத்தை மாது வெளிப்படுத்தியுள்ளான். இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் புகைப்படம் மற்றும் வீடியோவை இங்கு பணியாற்றுபவர்களுக்கு அனுப்பி வைத்து விடுதாக மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

யாரிடமும் சொல்ல முடியாமல் வீட்டிற்கும் செல்லமுடியாமல் அந்த இளம்பெண் தவித்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு அமலானதால் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மாதுவும் ஈரோடு வந்த நிலையில், வீட்டிற்கு வந்த இளம்பெண் நடந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் போலிஸிடம் சென்றால் குடும்ப மானம் போய்விடுமே என்ற பயத்தில் சொல்லாமல் பெண்ணுக்கு அவசர அவரசமாக திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். திருமண வேலைகளுக்கு இடையே மணமகனின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அந்தப் பெண்ணின் நிர்வாண படங்கள் வந்துள்ளன. இதனால் இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தச் சம்பவம் இனியும் தொடரக்கூடாது என எண்ணிய இளம் பெண் தன் பெற்றோருடன் சென்று திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் மாதுவின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் மாதுவிடம் இருந்த செல்போன் மற்றும் வீடியோ ஆதாரங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து அவனை சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் தொந்தரவு வழக்குகளில் புகார் அளிப்பதால் மட்டுமே பிரச்னை முடிவுக்கு வரும் என அறிவுரை வழங்கி பெண்ணை அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மகளிர் நல அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: 14 வயது சிறுமி எரித்துக் கொலை - ஒரே வாரத்தில் பொசுக்கப்பட்ட இரண்டாவது பிஞ்சு!