Tamilnadu

“வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லையை குறைத்த வனத்துறை” - தனியார் நிறுவனத்திற்காக எடப்பாடி அரசு சதி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிவருகிறது. ஊரடங்கால் சுற்றுச்சூழல் தற்போதுதான் பாதுகாப்பாக உள்ளது. இந்தச் சூழலில் இயற்கையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாத மத்திய அரசு கொரோனா ஊரடங்கால் மக்கள் கடும் இன்னல்களை சந்திக்கும் வேளையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது ரகசியமாக உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த 30 காடுகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மத்திய அரசைத் தொடர்ந்து தமிழக அரசு விவசாய விளை நிலங்கள் காடுகளைப் பற்றி கவலைப்படாமல் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. அதுமட்டுமின்றி தற்போது தனியார் மருந்து நிறுவனத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஐந்து கிலோமீட்டர் எல்லையை இரண்டு கிலோ மீட்டராக குறைத்து பறவைகள் சரணாலயத்தை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ளது புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கிச் செல்கின்றன

வேடந்தாங்கல் சரணாலயம் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது. அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் மருந்து கம்பெனி பல ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்கி அதற்கான கட்டிடமும் கட்டியுள்ளது.

சட்டத்துக்கு புறம்பாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு உட்பகுதியில் தனியார் மருந்து நிறுவனம் (sun pharmaceutical) கட்டிடம் கட்டியுள்ளது. இந்த தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசின் வனத்துறை கடந்த மார்ச் 19 ம் தேதி அன்று வேடந்தாங்கல் பறவை சரணாலயத்தின் ஐந்து கிலோ மீட்டர் எல்லையை இரண்டு கிலோ மீட்டராக சுருக்கி வரையறை செய்துள்ளது.

தனியார் மருந்து நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பியுள்ளது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “புதிய சாதியை உண்டாக்க வேண்டாம்” - தமிழக அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள்!