Tamilnadu

"விதிமீறல்கள் நடந்தால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்படும்” - சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, பாதிப்பு அதிகமற்ற பகுதிகளில் நாளை முதல் (மே 7) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரையும், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 03.00 மணி முதல் 5 மணி வரையும் மதுபானங்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சமயத்தில், டாஸ்மாக் திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய அமர்வு, தமிழகத்தில் சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளையும், உரிய நிபந்தனைகளையும் பின்பற்றி டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறக்கலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

மதுக்கடைகளை திறக்க தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், 3 நாளைக்கு ஒருமுறை ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே விற்க வேண்டும் எனவும், வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் எண்ணுடன் ரசீது தரப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தினால் 2 பாட்டில்கள பெற்றுக்கொள்ளலாம் எனவும், அதற்கான வசதியை டாஸ்மாக் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மதுபான விற்பனையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் அந்த மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்து, வழக்கு விசாரணையை மே 14ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Also Read: “மது நமக்கு என்ன தரப்போகுது?”: முதல்வரிடம் கேட்க 30 கி.மீ நடைபயணம்”- 5 சிறார்களின் நெகிழ்ச்சி போராட்டம்!