Tamilnadu

மதுபோதைக்காக சானிடைசர் குடித்த இளைஞர் பரிதாப பலி - கோவையில் நடந்த சோக சம்பவம்!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மேலும் பொதுஇடங்களில் மக்கள் கூடும் வகையில் செயல்படும் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற முக்கிய நகரங்களில் டாஸ்மாக் கடைகளை மூட அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

ஆனால் இது மது குடிப்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது; அவர்களை வீபரித முடிவு எடுக்கவும் வைத்துள்ளது. முன்னதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவ இளைஞர்கள் மாற்று போதைக்கு முயற்சி செய்யும் நோக்கில், முடி திருத்தும் கடைகளில் சேவிங் செய்த பிறகு முகத்தில் தடவும் லோஷனை, 7அப் குளிர்பானத்தில் கலந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மதுபோதையால் மாற்றும் போதைப் பொருளை பயன்படுத்தி 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மது கிடைக்காததால் சானிடைசரை குடித்து இளைஞர் ஒருவர் பரிதாமாக உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் பெர்னார்ட். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. இவர் திருப்பூரில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெர்னார்ட் கடந்த இரண்டு நாட்களாக சானிடைசரைக் குடித்து வந்து உள்ளார்.

மேலும் உணவு ஏதும் உண்ணாமல் தொடர்ந்து சானிடைசர் மட்டுமே போதைக்காக குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை வயிற்றுவலி ஏற்பட சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் கூட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சூலூர் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மதுவுக்கு அடிமையானவர்கள் வீபரித முடிவுகளை எடுப்பதற்குள் அவர்களுக்கு தகுந்த ஏற்பாட்டை அரசு செய்துகொடுக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் சிலர் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: “டாஸ்மாக் மூடலால் கள்ளச்சாராய விற்பனை படுஜோர்” : தமிழகத்தில் மதுவால் நிகழும் கொடுமைகள்- கவனிக்குமா அரசு?