Tamilnadu

“உதைவாங்கிட்டு ஓடாத”: புகார் அளிக்கச் சென்ற காவலருக்கே இந்த நிலையா? - வைரலாகும் காவலர்களின் சண்டை வீடியோ!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் புகார் அளிக்கச் செல்லும் பொதுமக்களிடம் போலிஸார் மரியாதையுடன் நடந்துகொள்வதில்லை என்றும், புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி காவல் நிலையத்தில் பணி புரியும் போலிஸாருக்கே அதே நிலைதான் எனத் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வருகிறார் பிரபு. இவரது மனைவி தனது குடும்ப பிரச்னை காரணமாக உறவினர்கள் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனஜாவிடம் போனில் தொடர்புகொண்ட பிரபு, புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.

ஆனால், போன் செய்த உதவி ஆய்வாளர் பிரபுவிடம் மரியாதைக்குறைவாகப் பேசியுள்ளார் வனஜா. இதனால் ஆத்திரமடைந்த பிரபு பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து சக போலிஸாரை இப்படித்தான் நடத்துவீர்களா? என நியாயம் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோசமான வார்த்தைகளால் வனஜா காவல் உதவி ஆய்வாளரை தீட்டியுள்ளார். அப்போது ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற வனஜா, பிரபுவை பார்த்து “உதை வாங்கிட்டு ஓடாத” என்றும் அறைந்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

Also Read: ஆயுதப் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: பணிச்சுமை காரணமா? அதிர்ச்சி தகவல்!

இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு தனது புகாரை திரும்பத் தருமாறும் காவல்துறை உயரதிகாரிகளிடம் சென்று நியாயம் பெற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவர் பேசிய எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத வனஜா தொடர்ந்து அவரை மிரட்டும் தொனியிலேயே பேசியுள்ளார்.

இதனையடுத்து பிரபுவும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவத்தின்போது அங்கிருந்த போலிஸார் எடுத்த செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ஏய்.. நீ அழகா இருக்கே!” : குடிபோதையில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய காவலர்!