Tamilnadu

காசுக்காக பாட்டியைக் கொன்ற பப்ஜி நண்பர்கள் - சென்னையில் பகீர்..!

பப்ஜி விளையாட்டால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், அதனால் பல இன்னல்களுக்கு ஆளாவது தொடர்கதையாகி வருகிறது. அந்த விளையாட்டின் மீதான அதீத ஆர்வத்தால் எதையேனும் செய்துவிட்டு இறுதியில் வில்லங்கத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

அவ்வகையில் சென்னையை அடுத்த ஆவடியில் மூதாட்டி ஒருவரை பப்ஜி நண்பர்கள் இருவர் கொன்றுவிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.

ஆவடி அருகே கண்ணபாளையம் பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி மல்லிகா. அவருக்கு வயது 56. சில ஆண்டுகளுக்கு முன் மல்லிகாவின் கணவர் பார்த்தசாரதி மறைந்துவிட்டதால் கண்ணபாளையத்தில் உள்ள வீட்டில் தனியாகவே வசித்து வருகிறார்.

மல்லிகா

வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் ராணுவ கேண்டீனில் இருந்து வருவதால் மல்லிகா வெளியே எங்கும் செல்லமாட்டாராம். தினமும் காலை 10 மணிக்கு தூங்கி எழும் பழக்கமுடையவர் மல்லிகா. ஆகையால் அவரை அருகே உள்ள உறவினர்கள் யாரும் தொந்தரவு செய்யமாட்டார்களாம்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி நண்பகல் 12 மணி ஆகியும் மல்லிகா எழுந்து கொள்ளாததால் வீட்டுக்குச் சென்றுள்ளார் மல்லிகாவின் தங்கை மகள் மீனாட்சி. அப்போது, மல்லிகாவின் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலிஸுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஆவடி போலிஸார் மல்லிகா உயிரிழந்ததால் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும், மல்லிகா கொலை செய்யப்பட்டது எப்படி என போலிஸார் விசாரணையை தீவிரபடுத்தியிருக்கிறார்கள்.

அப்போது, மல்லிகாவின் இறுதிச்சடங்குக்கு அயனம்பாக்கத்தில் உள்ள அவரது பேரன் கோகுல் வராததால் சந்தேகமடைந்த போலிஸார் கோகுலின் தயாரிடம் விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

படிப்பை முடித்துவிட்டு பணிக்கு செல்லாமல் வீட்டில் PUBG கேம் விளையாடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் கோகுல். தனது அன்றாட செலவுக்காக பாட்டி மல்லிகாவிடம் சென்று காசு வாங்கி வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி பணம் வாங்குவதற்காக சக பப்ஜி நண்பருடன் பாட்டி வீட்டுக்குச் சென்ற கோகுலிடம் காசு கொடுக்க மல்லிகா மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கோகுல், மூதாட்டி மல்லிகாவை கீழே தள்ளியிருக்கிறார்.

இதனால் பலத்த காயமடைந்து மல்லிகா மயங்கி விழுந்திருக்கிறார். பின்னர் அவரிடம் இருந்த நகைகளையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு கோகுலும் அவனது நண்பரும் தப்பித்திருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலிஸார் தலைமறைவாக இருந்த கோகுலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், கோகுலன் இணைந்து கொலை கொள்ளையில் ஈடுபட்ட சிறுவனான சக நண்பரும் கைதுக்கு ஆளாகியிருக்கிறான்.