Tamilnadu

மகனின் காதலியையே ஏமாற்றி, பலவந்தப்படுத்தி தாலி கட்டிய தந்தை - நாகை அருகே பகீர்!

பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு ஆளாகி சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளவர் நித்தியானந்தா. அதுபோல நாகை மாவட்டத்தில் உள்ள கருப்பு நித்தியானந்தம் என்பவர் தன்னுடைய மகனின் காதலியை கடத்தி வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம் செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு நித்தியானந்தம். அவருக்கு வயது 45. அ.ம.மு.கவை சேர்ந்தவர். அவரது மகன் முகேஷ்கண்ணன் (20). சென்னையில் பணிபுரிந்து வரும் முகேஷ்கண்ணன், கல்லூரியில் படிக்கும் போது நாலுவேதபதி பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார்.

முகேஷின் வீட்டில் இவர்களது காதலை ஆமோதித்துள்ள நிலையில், பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அந்த பெண்ணை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர் பெண் வீட்டார்.

இதனையடுத்து, பெண் வீட்டுக்குச் சென்ற முகேஷ் கண்ணனின் தந்தை கருப்பு நித்தியானந்தம், தனது மகனுடன் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி அந்தப் பெண்ணை அழைத்து வந்துள்ளார். நம்பி வந்த அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு, அவருக்கு தாலியும் கட்டியுள்ளார் நித்தியானந்தம்.

அதன் பிறகு, அவரிக்காடு பகுதியில் உள்ள தனது நண்பர் சக்திவேலின் வீட்டில் அந்தப் பெண்ணை தங்கவைத்ததோடு, அவரை மிரட்டிப் பணிய வைத்துள்ளார் கருப்பு நித்தியானந்தம். மேலும், தன் மகன் முகேஷ் கண்ணனிடம் உன் காதலிக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிவிட்டது எனக் கூறி நம்ப வைத்துள்ளார்.

இதனிடையே அவரிக்காட்டில் உள்ள சக்திவேலின் வீட்டில் இருந்து தப்பித்த அந்தப் பெண், நேரடியாக வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

பின்னர் விவகாரம் பூதாகரமானதும் உடனடியாக கருப்பு நித்தியானந்தம், அவரது நண்பர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி பவுன்ராஜவள்ளி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலிஸார் மூவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

பெற்ற மகனின் காதலியை தந்தையே பலவந்தப்படுத்தி தாலி கட்டிய செய்தி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.