Tamilnadu
TNPSC முறைகேடு : தொடர்ந்து சிக்கி வரும் அதிகாரிகள்; இடைத்தரகர்கள் - குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா?
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்வு எழுதியவர்கள் பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்ற தகவல் விசாரணை மூலம் வெளிவந்தது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு தேர்வு எழுதிய 99 பேர் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்ற 99 பேரும் எப்போதுமே டி.என்.பி.எஸ்.சி தேர்வை எழுத முடியாத வகையில் வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அது தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று, உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ் ஆகியோர் இடைத்தரகர்களுக்கு ரூபாய் 7.5 லட்சம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதல் விசாரிக்கப்பட்ட இவர்கள் மாஜிஸ்திரேட் நாகராஜ் முன் ஆஜர்படுத்தப் பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க 15 நாட்கள் அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட் நாகராஜ் உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவர்களை புழல் சிறைக்கு போலிஸார் அழைத்துச் சென்றனர். இதோடு இந்த வழக்கில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்து ஏமாந்த சில தேர்வர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து தேர்ச்சி பெறாமல் ஏமாற்றமடைந்தவர்கள் மொத்தம் 63 பேர் எனத் தெரியவந்துள்ளது.
இன்னும் பலரும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரத்தில் சிக்கக்கூடும் என்பதால், ஒட்டுமொத்தமாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!