Tamilnadu

TNPSC குரூப் 2ஏ தேர்விலும் பித்தலாட்டம் : முறைகேடு செய்து பணியிலிருக்கும் 37 பேர் மீது எப்போது நடவடிக்கை?

TNPSC 'குரூப் - 4' தேர்வு முறைகேடு தமிழகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், 2017ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய TNPSC குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரத்தில், 3 இடைத்தரகர்கள் சி.பி.சி.ஐ.டி போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் தொடரலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், 2017ம் ஆண்டு நடந்த குரூப்-2ஏ தேர்விலும் இதுபோன்ற முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதிலும் தற்போது பிரச்னைக்கு உள்ளாகியிருக்கும் அதே கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களில் தேர்வெழுதிய 37 பேர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருந்துள்ளனர்.

குரூப்-2ஏ பணிக்கான தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தாலும், அவர்கள் அரசு அதிகாரிகளாக தற்போது பணியாற்றி வரும் நிலையில், அவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசுப் பணிகளுக்காக லட்சக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் கடுமையாகப் படித்து தேர்வுக்குத் தயாராகி வரும் நிலையில், இதுபோன்ற முறைகேடுகள் கடும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன. அடுத்தடுத்த முறைகேடு குற்றச்சாட்டுகளால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

Also Read: “ராமேஸ்வரத்திற்கு திதி கொடுக்க வந்தோம்; தேர்வு எழுதினோம்” - TNPSC முறைகேட்டில் 99 பேரை சிக்கவைத்த பதில்!