Tamilnadu

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவுக்கு தடை கோரி ஐகோர்ட் கிளையில் முறையீடு!

தஞ்சை பெரிய கோவிலில் பிப்ரவரி 5ஆம் தேதி நடக்கவுள்ள குடமுழுக்கு விழாவுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் முறையிட்டுள்ளார்.

யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட்ட புராதான தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோவிலில் தொல்லியல்துறை அனுமதி பெறாமல் குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது. தொல்லியல் துறையிடம் தகவல் கொடுக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட பிறகே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது விதிமுறைகளை பின்பற்றாமல் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி தமிழ்தேச பொதுவுடைமை கட்சியின் தலைவர் மணியரசன் தரப்பிலும், ஆகம விதிப்படி சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த வேண்டும் எனவும் மயிலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதனையடுத்து மனுவாக தாக்கல் செய்தால் அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், பெரிய கோவில் குடமுழுக்கு விழா தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Also Read: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்துக : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!