Tamilnadu

தந்தை பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதா? - ரஜினிகாந்த் மீது நடவடிக்கை கோரி கோவையில் புகார்!

தந்தை பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் திராவிடர் விடுதலைக்கழகத்தினர் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகார் மனுவில், சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமர், சீதையின் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் சென்றதாக அப்பட்டமான பொய்யை உரைத்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொது அமைதியை குலைக்கும் நோக்கிலும் பேசியிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை ரஜினி மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தர்பார் படம் திரையிடப்படும் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தை முற்றுகையிடுவோம் என கூறியுள்ளனர்.