Tamilnadu

போதையில் வண்டி ஓட்டினால், பைக் ரேஸ் நடத்தினால் லைசென்ஸ் ரத்து: சென்னையில் போலிஸ் கெடுபிடி!

சென்னையில் இன்று இரவு புத்தாண்டு பண்டிகை கொண்டாட உள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறை சார்பில் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்கும் வண்ணம் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் அடையாறு, கீழ்பாக்கம், புளியந்தோப்பு, அயனாவரம் உள்ளிட்ட 368 இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவில், தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் என மக்கள் அதிகம் கூடும் கூடிய 100 இடங்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட உள்ளது.

மெரினா, பெசன்ட்நகர் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு நலன் கருதி மணலில் செல்லக்கூடிய ஏடிவி வாகனத்தையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவொர், காவல்துறையினர் 25 குழுக்களாக அமைக்கப்படவுள்ளது.

அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்குவோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர்களை பற்றிய குற்ற ஆவணங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பின்னர் பாஸ்போர்ட் சரிபார்ப்பின் போது அவர்கள் போதையில் வாகனம் ஓட்டியதாக குறிப்பிடுவோம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலன் கருதி அலைபேசி வாயிலாக கண்காணிக்கும் குழு ஒன்று அமைத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக புகார் தெரிவிக்கப்பட்டு அடுத்த அடுத்த நிமிடங்களில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை போன்ற கடற்கரை சாலை வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மாற்றுவழியில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அதேபோல் பெசன்ட் நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு செல்லக்கூடிய வழியில் எந்த வாகனங்களும் அனுமதி கிடையாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மெரினா கடற்கரை உட்புற சாலை இரவு 8 மணிக்கு மூடப்பட்டு பின்பு அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.