Tamilnadu

“அரை கிலோ வெங்காயம் கொடுத்தால் பிரியாணி இலவசம்” - பிரபல ஹோட்டலின் ‘பண்டமாற்றுமுறை’ ஆஃபர்!

கடந்த ஒருமாத காலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது.

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 40,000 டன் வெங்காயம் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க மக்கள் மறுப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

Also Read: ’மொபைல் போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ : பட்டுக்கோட்டை மொபைல் கடையில் அதிரடி சலுகை !

வெங்காயத்தின் கடுமையான விலை உயர்வை வெளிப்படுத்தும் வகையில் திருமண ஜோடிகளுக்கு வெங்காயத்தை நண்பர்கள் பரிசாக வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல, பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள STR மொபைல்ஸ் என்ற கடையில் ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என அதிரடி ஆஃபர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சலுகைக்கு பிறகு அந்தக் கடையில் வியாபாரம் அதிகரித்ததாக கடையின் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் ஹோட்டல் ஒன்று அரை கிலோ வெங்காயம் கொடுத்தால் ஒரு பிரியாணி வழங்கி வருகிறது. சென்னை கந்தன்சாவடியில் உள்ள ஓ.எம்.ஆர் ஃபுட் ஸ்ட்ரீட் வளாகத்தில் அமைந்துள்ளது ஏ.பி புட் பாரடைஸ் உணவகம்.

இங்கு தான் வெங்காயத்திற்கு பதிலீடாக பிரியாணி வழங்கப்படுகிறது. இதையடுத்து பலரும் அங்கு சென்று பிரியாணி சாப்பிட்டுவிட்டு அதற்கு பதில் வெங்காயத்தை கொடுத்துவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், மன்னர் காலத்தில் இருந்த பண்டமாற்றுமுறை போல் தங்களுக்கு வெங்காயத்தின் தேவை அதிகமாக இருப்பதால் இப்படி 1/2 கிலோ வெங்காயத்தை மக்களிடம் இருந்தே பெற்றுக்கொண்டு ஒரு பிரியாணியை வழங்கும் சலுகை திட்டத்தை அறிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.