Tamilnadu

அரசை நம்பி பலனில்லையென சொந்த செலவில் 1 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால் அமைத்து நீரை சேமிக்கும் விவசாயிகள்!

தருமபுரி மாவட்டம் காரியமங்கம் அருகே பெரிய ஏரி (சோமலிங்க ஏரி) என்ற ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் நீர் நிரம்பி உபரிநீர் வெளியேறி வாய்க்கால் வழியாக அருகில் உள்ள ஏரிக்குச் செல்லும்.

இந்நிலையில், கொண்டிசெட்டிபட்டியில் உள்ள குறவன் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் மழையால் நீர் நிரம்பி வாய்க்கால் சேதமானதால், உபரி நீர் செல்ல வழியில்லாமல் நீர் முழுவதும் வீணாகிக் கொண்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் அதனைப்பற்றி கவலைப்படமால் அலட்சியமாக இருந்துள்ளது. இதனால் அதிருப்தியிலிருந்த கொண்டிசெட்டிபட்டி, புதுக்குடியானூர், குட்டூர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஏரியிலிருந்து குறவன் ஏரி வரை வாய்க்கால் வெட்டி நீரைச் சேமிக்க முடிவு செய்தனர்.

தூர்வாரிய வாய்க்கால்

அதன்படி விவசாயிகள் தங்களால் முடிந்த தொகையை ஒன்று சேர்ந்தும், பொதுமக்களிடம் நன்கொடை பெற்றும் சேர்த்து 68 ஆயிரம் செலவில் வாய்க்கால் வெட்டி, வீணாகச் செல்லும் தண்ணீரைச் சேமித்து வருகின்றனர்.

சுமார் 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் நீரைச் சேமிப்பதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும், நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அரசை எதிர்பார்க்காமல் விவசாயிகளே வாய்க்கால் அமைத்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Also Read: சோழவரம் ஏரி தூர்வாரும் பணியை திடீரென நிறுத்தியது ஏன்? : பொதுமக்கள் கண்டனம்!