Tamilnadu

“சமூகநீதியின் சமரசமற்ற காவலர் கி.வீரமணி” - மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சிங்கப்பூரிலுள்ள அவருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பத்து வயதில், திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தராக, அறிவொளியினால் ஆர்வம் மிகக் கொண்டு, மேடையில் முழங்கத் தொடங்கி, 87 வயதிலும் சுறுசுறுப்பான சுயமரியாதை இளைஞராய், இன - மொழி எழுச்சியூட்ட, நாள்தோறும் வலம் வருகிறார், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் கி. வீரமணி.

அவர், சமூகநீதியின் சமரசமற்ற காவலர்; தமிழினத்தின் தகுதி செறிந்த பாதுகாப்பு அரண்! அவரது சிந்தனையும் சொல்லும் செயலும்; உலகத் தமிழ் மானுடத்துக்கு மேலும் பல்லாண்டு தொடர வேண்டும்; தந்தை பெரியார் உலகம் பயனுற வேண்டும்; என்று, அவர் பிறந்தநாளாம் இன்று வணங்கி, வாழ்த்துகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.