Tamilnadu

''சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க முடியாது''- தமிழக அரசுடன் மல்லுக்கட்டும் பொன்.மாணிக்கவேல்!

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் வகையில் 2017ம் ஆண்டு ஜூலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.-யாக பொன் மாணிக்கவேலை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. பின்னர், 2018 நவம்பர் 30ம் தேதி பொன்.மாணிக்கவேல் ஓய்வுப் பெற்றதையடுத்து, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து, சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக இதுவரை அவர் விசாரணை செய்த ஆவணங்கள், ஆதாரங்கள், குற்றவாளிகள் குறித்த விவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்குமாறு தமிழக உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டு இருந்தார்.

மேலும், தமிழக டி.ஜி.பி ஒப்புதலுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சிலைக் கடத்தல் வழக்கு விசாரணை ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க முடியாது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ”சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். இதனால், அரசின் உத்தரவு எனக்கு பொருந்தாது.

சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்களை சிறப்பு அதிகாரி கூடுதல் டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு வரும் திங்கட்கிழமை இரண்டாம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அது வரை அரசு காத்திருக்க வேண்டும்.

பணி நீட்டிப்பு மறுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆகையால், நேற்று அரசு வெளியிட்ட தடை சட்டவிரோதம். நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஆவணங்களை யாரிடமும் ஒப்படைக்க இயலாது'' எனத் தெரிவித்துள்ளார்.