Tamilnadu

“அனுராதாவுக்கு விபத்து நடந்த இடத்தில் கொடிக்கம்பம் இல்லை” - உண்மையை மறைக்க முயலும் அ.தி.மு.க அரசு!

கடந்த சில தினங்களுக்கு முன், கோவை பீளமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சிங்காநல்லூரைச் சேர்ந்த அனுராதா (எ) ராஜேஸ்வரி எனும் இளம்பெண் மீது அ.தி.மு.க கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறி இளம்பெண்ணின் கால்கள் நசுங்கியது.

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அனுராதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ரத்த நாளங்கள் செயல் இழந்ததால், அவரது இடது கால் அகற்றப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, அ.தி.மு.க-வினரோ ஆறுதல் கூட தெரிவிக்காதது மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

இந்நிலையில், சட்டவிரோத பேனர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவையில் இளம்பெண் அனுராதாவுக்கு விபத்து நடந்த இடத்தில் கொடிக் கம்பம் இல்லை எனவும் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் தெரிவித்தார்.

அரசியல் கட்சி பேனரால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த குடும்பத்திற்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ஏன் வசூலிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அ.தி.மு.க கொடிக்கம்பத்தால் விபத்து நடைபெற்ற நிலையில், அதை காவல்துறையினரும், அ.தி.மு.க ஆட்சியாளர்களும் திட்டமிட்டு மறைக்க முயன்று வருகின்றனர். நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ள கருத்து இதை மெய்ப்பித்துள்ளது.

Also Read: ”கட்சி கொடிக்கம்பம் நடக் கூடாதுன்னு நீதிமன்றம் சொல்லலியே” - கோவை விபத்துக்கு முதல்வரின் அலட்சிய பதில்!