Tamilnadu

ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 அண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி பரோல் கோரிய விண்ணப்பத்தில் தங்க இருக்கும் முகவரியை தெரிவிக்காததால் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்றும் தற்போது முகவரி குறிப்பிட்டு ராபர்ட் பயாஸ் அளித்துள்ள புதிய பரோல் விண்ணப்பம் சிறைத்துறையின் பரிசீலினையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராபர்ட் பயஸுக்கு பரோல் வழங்க ஆட்சேபம் இல்லை என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கொட்டிவாக்கத்தில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

Also Read: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுப்பு!