Tamilnadu

அடங்காத சாதி ‘தீ’- பெற்ற மகளை எரித்துக் கொன்ற தாய் : தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

நாகை மாவட்டம் வாகை குளம் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணன் - உமா மகேஸ்வரி தம்பதியினர். இவர்களது மகள் ஜனனி. 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், ஜனனிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

ராஜ்குமார் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் ஜனனியின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஜனனிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

இதை ஜனனி மூலம் தெரிந்து கொண்ட ராஜ்குமார், ஜனனியை அழைத்துச் சென்று தனது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். ராஜ்குமார் தங்கள் மகளைக் கடத்தியதாக போலிஸில் புகார் அளித்துள்ளனர் ஜனனியின் பெற்றோர். பின்னர் போலிஸார் அறிவுரைப்படி ஜனனிக்கு அறிவுரைக் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு இது தொடர்பாக ஜனனிக்கும் அவரது தாய் உமாமகேஸ்வரிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜனனியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற தாய் உமா மகேஸ்வரி தனக்கும் தீவைத்துக் கொண்டார்.

இதில் உமா மகேஸ்வரி மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனனி பரிதாபமாகத் தீயில் கருகி உயிரிழந்தார். தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்தற்காக சொந்த மகளையே எரித்துக்கொன்ற செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.