Tamilnadu

என்ஜினே இல்லாத பைக்குக்கு அபராதம் விதித்த கடலூர் எஸ்.ஐ - வீடியோ வெளியானதால் பரபரப்பு!

மத்திய பா.ஜ.க அரசு, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டதால் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பன்மடங்கு உயர்ந்தது. இதனால் சாமானிய மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில், கடலூர் சேத்தியாத்தோப்பில் எஞ்சின் இல்லாத வண்டியை தள்ளிக்கொண்டு வந்தவரை மடக்கிப்பிடித்து உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் அபராதம் விதித்துள்ளார்.

மோட்டார் வாகன சட்டத்தின்படி, எஞ்சின் உள்ள வாகனங்களுக்கே அதன் விதிமுறைகள் பொருந்தும் என்று இருக்கும் நிலையில், எஞ்சினே இல்லாத பைக்கில் வந்தவருக்கு போலிஸார் அபராதம் விதிப்பது எவ்வாறு செல்லும் என வாகன உரிமையாளர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவ்வாறு அபராதம் செலுத்த வேண்டுமானால் கம்ப்யூட்டர் பில்லை கொடுங்கள் தபால் அலுவலகத்திலோ நீதிமன்றத்திலோ கட்டிக்கொள்கிறேன் என அந்த இளைஞர் கேட்டுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொள்ளாமல் வண்டியை போலிஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்லுமாறு கூறி விதிகளுக்கு புறம்பாக அபராதம் விதிக்குமாறு தொலைபேசி மூலம் அறிவுறுத்தவும் செய்கிறார் அந்த உதவி காவல் ஆய்வாளர்.

போலிஸாரின் இந்த அராஜக போக்கையெல்லாம் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பரவ விட்டுள்ளனர். விதிகளை மீறும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கும் அரசு, விதிகளுக்குப் புறம்பாக அராஜகத்தில் ஈடுபடும் காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் சென்னையில் காசிமேடு இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மறியலில் ஈடுபட்டு, போலிஸார் மீது வைத்திருக்கும் மரியாதையை வெளிப்படுத்தி வேறு எங்கும் செல்லவேண்டாம் என காவல் ஆய்வாளரிடம் கேட்டுக்கொண்டனர். இப்படியும் சில போலிஸார் இருக்கும் தமிழக காவல்துறையில், சேத்தியாத்தோப்பு சக்திவேல் போன்ற காவல்துறையினரும் இருப்பது வேதனையை அளிக்கிறது.