Tamilnadu

“சமூக நீதியை புதைக்கும் பா.ஜ.க செயலுக்கு எதிரான குரல் அறிவாலயத்தில் இருந்து ஒலிக்கிறது” - திருமாவளவன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ஒரே தேசம், ஒரே மொழியென மத்திய பா.ஜ.க அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது என குற்றஞ்சாட்டினார். மேலும் மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்படவேண்டும் என தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

மேலும், “பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தவேண்டும் என வேறு எந்த மாநிலத்திலும் இந்த குரல் எழவில்லை. அதேபோல், எந்த அரசியல் கட்சியும் இது தொடர்பாக முயற்சிகளை முன்னெடுக்கவில்லை. இந்நிலையில், தி.மு.க சார்பில் இடஒதுக்கீட்டுக்கான கோரிக்கை வைத்திருப்பது சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையை வெளிப்படுத்துகிறது .”

“அனைத்தையும் தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

இதற்கு எதிரான குரல் அறிவாலயத்தில் இருந்து, மீண்டும் ஒலிக்கிறது.” இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக திருமாவளவன் கூறியுள்ளார்.