Tamilnadu

“விளம்பர மோகத்தால் ஆளும் கட்சியே நீதிமன்ற வழிகாட்டுதலை மீறுகிறது”- இரா.முத்தரசன் கடும் கண்டனம்!

கோவையில் அதிமுகவினர் கொடி கம்பத்தால் இளம் பெண் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினரின் தொடர் விளம்பரத்தால் இதுபோல விபத்துக்கள் தொடர்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கோவை சிந்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த அனுராதா என்பவர் நேற்று காலை பணிக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அ.தி.மு.க. விளம்பரக் கொடிக்கம்பம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. அதேநேரத்தில் அங்கு ஒரு லாரியும் வந்துள்ளது. இதையடுத்து அனுராதா மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அனுராதாவின் இரு கால்களும் முறிந்து படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஏற்கனவே அ.தி.மு.க.வினரின் பேனரால் சென்னை குரோம்பேட்டைச் சேர்ந்த இளம் பொறியாளர் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்ததை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் எச்சரித்ததும், கண்டித்ததும் நாடறியும். இதுபோன்ற பேனர், விளம்பர கொடிக்கம்பங்களை வைக்கமாட்டோம் என உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. உறுதியளித்ததையும் அறிவோம்.

ஆனால் அடுத்தடுத்து விளம்பர மோகத்தால் ஆளும் கட்சியே நீதிமன்ற வழிகாட்டுதலை மீறுவது கண்டனத்திற்குரியது. படுகாயம் அடைந்துள்ள அனுராதாவுக்கு உரிய உயர் சிகிச்சைகள் அளிக்க வேண்டும். அத்துடன் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என அதில் கோரிக்கை வைத்துள்ளனர்.