Tamilnadu

சுர்ஜித்தை மீட்பதில் அரசிடம் திட்டமிடல் இல்லை - கரூர் எம்.பி. ஜோதிமணி குற்றச்சாட்டு!

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் விழுந்து 4 நாட்கள் ஆகியது. இன்றளவும் மீட்பு பணிகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. தமிழகம் முழுவதும் குழந்தை மீட்கப்பட வேண்டும் என்ற நினைப்பே அனைவரது மனதிலும் உள்ளது.

இந்த நிலையில் நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை 24 மணிநேரம் கழித்தே வந்தது.

ஒரு திட்டம் தோல்வியடையும் போது அடுத்த என்ன செய்யவேண்டும் என்றுகூட அரசு தரப்புக்கு தெரியவில்லை என குற்றஞ்சாட்டினார்.

சிறுவனை மீட்டெடுப்பதில் முடிவெடுக்க முடியாத சூழலே நிலவுகிறது. முதலமைச்சரே நேரடியாக தலையிட்டு சிறுவனை மீட்பதற்கான துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.