Tamilnadu

3 பெண்குழந்தைகளுடன் தாய் தற்கொலை? - உறவினர்கள் நால்வர் கைது : வெளியான அதிர்ச்சித் தகவல்!

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த பாண்டி - லட்சுமி தம்பதிக்கு அனுசியா, ஐஸ்வர்யா, அக்க்ஷயா என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு லட்சுமியின் கணவர் பாண்டி இறந்துவிட்டார்.

இந்நிலையில், லட்சுமி டீயில் விஷம் கலந்து, தானும் தற்கொலை செய்ய முயன்றதோடு 3 மகள்களையும் குடிக்கச் செய்துள்ளார். பின்னர், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உயிருக்குப் போராடிய 4 பேரையும் மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் அனுசியாவும், ஐஸ்வர்யாவும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் லட்சுமி மற்றும் அக்க்ஷயா ஆகியோரின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக்கண்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அனுசியா, ஐஸ்வர்யா, லட்சுமி

பின்னர், சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார். லட்சுமியின் கடைசி மகள் அக்க்ஷயாவுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லட்சுமியின் அண்ணன் முருகன் என்பவர் அக்‌ஷயாவை கவனித்து வருகிறார்.

உடல்நிலை தேறிய அக்‌ஷயா தாய்மாமன் முருகனிடம், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதற்கு முந்தைய நாள் உறவினர்கள் பாண்டி, தனலட்சுமி, விஜயகுமார், செல்லத்தாய் மற்றும் அம்பிகா ஆகியோர் வீட்டிற்கு வந்து தனது அம்மாவை மிரட்டியதாகச் சொல்லியிருக்கிறார்.

மேலும் ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்துபோன முருகன், போடி நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிறுமி அக்‌ஷயா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பாண்டியன், தனலட்சுமி, விஜயகுமார், செல்லத்தாய் ஆகிய நால்வரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாகியுள்ள அம்பிகாவை போலிஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்தகட்ட விசாரணையில் தான் முழுமையான தகவல் வெளிவரும் என போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தற்கொலை சம்பவம் நடைபெற்றதும் தாம் மாட்டிக்கொள்வோம் என எண்ணி வறுமையில் 4 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக குற்றவாளிகள் அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.