Tamilnadu
அடுத்த 2 நாட்களுக்கு குடையுடன் தயாரா இருங்க மக்களே... 4 மாவட்டங்களில் மிக கனமழை; 13 மாவட்டங்களில் கனமழை!
வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிரமடைந்து வருகிறது. அதனால் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், நீலகிரி போன்ற மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது,
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். அதுபோல, அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது.
இதனால், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் மண்டபத்தில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 48 மணிநேரத்தைப் பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுச்சேரி, சென்னை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய 13 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகரில் அடுத்த இரு தினங்களுக்கு மழை தொடரும்.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசுவதாலும், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதாலும் இன்றும் நாளையும் (அக்., 22,23) மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!