Tamilnadu

தீபாவளிக்கு ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு : இரட்டை வேடம் போடும் அ.தி.மு.க அரசுக்கு மக்கள் கண்டனம்!

தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து 25ம் தேதி டாஸ்மாக் கடைகளில் 80 கோடிக்கும், 26ம் தேதி 130 கோடிக்கும், 27ம் தேதி 175 கோடி ரூபாய்க்கு என மொத்தம் 385 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்ய அ.தி.மு.க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு 320 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விற்பனையை அதிகரிக்க இலக்கை கொண்டுள்ளது அ.தி.மு.க அரசு.

15 நாட்களுக்குத் தேவையான மது வகைகளை முன்கூட்டியே இருப்பு வைத்திருக்கவும், குறித்த நேரத்திற்கு மதுக்கடைகளை திறந்து வைக்கவும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் ஆட்சி என வாய்க்கு வாய் தம்பட்டம் அடித்துக்கொண்டு வரும் எடப்பாடியின் அ.தி.மு.க அரசு, தேர்தல் பிரசாரங்களிலும், பொதுக்கூட்டங்களுக்கு செல்லும்போதும் மது விற்பனையை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறிவருகிறது.

அதே சமயம், மக்களைக் கொன்று குவிக்கும் வகையில் தற்போது படிப்படியாக மதுபான விற்பனையை அதிகரித்து வருவதும் அ.தி.மு.க அரசுதான். எடப்பாடி அரசின் இந்த இரட்டை மனப்பான்மை நிலையால் ஏழை மக்கள் குறிப்பாக பெண்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்.

இது மட்டுமல்லாமல், டாஸ்மாக் மூலம் அதிகமானோரை கொன்றுகுவித்து, தமிழகத்தில் இளம் விதவைகளை அதிகளவில் உருவாக்கத் திட்டமிடும் அ.தி.மு.க அரசின் செயல்பாட்டுக்கு சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.