Tamilnadu

ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், பெல்லட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி தான் வாங்கி கொடுத்தது என்ற குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சி.பி.ஐ. சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை மனுதாரர் பேரறிவாளன் தரப்பிற்கு கொடுக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. மேலும் இதுகுறித்து பதில் அளிக்குமாறு சி.பி.ஐ மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு ஓராண்டாக விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில் நவம்பர் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

இந்நிலையில் பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு உச்சநீதிமன்றத்தில் தங்கள் வழக்கை பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது, விசாரிக்க வேண்டும் என நீதிபதி ரமணா அமர்வில் முறையிட்டார். அதனை ஏற்ற நீதிபதி என்.வி.ரமணா, வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும், நவம்பர் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.