Tamilnadu

பொதுமக்களே உஷார்... வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி பணம் பறிப்பு : போலி கால் சென்டரின் மோசடி அம்பலம்!

சென்னையில் ஒரு கும்பல் வங்கி கடன் பெற்று தருவதாக மோசடி செய்து பணத்தை பறிப்பதாக போலிஸாருக்கு புகார் வந்துள்ளது. பின்னர் அந்த புகாரை விசாரிக்க குற்றபிரிவு போலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதனையடுத்து குற்றப்பிரிவு போலிஸார் நடத்திய விசாரனையில் 12 பேர் கொண்ட மோசடி கும்பல் ஒன்று சிக்கியுள்ளது.

சென்னை சிட்லபாக்கம் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலி கால் சென்டரை இந்த கும்பல் நடத்திவந்துள்ளது. மணிகண்டன் என்பவர் இந்த குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விளம்பரங்கள் மூலம் வேலைக்கு பட்டதாரி பெண்கள் மற்றும் ஆண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அவர்கள் பொதுமக்களின் தொலைப்பேசி எண்களைத் தொடர்புக் கொண்டு, வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி அவர்களின் வங்கி கணக்கு மற்றும் ஆதார் போன்ற ஆதரங்களை பெற்றுள்ளனர்.

பின்னர் அடுத்த இரண்டு நாட்களுக்குள் வங்கியில் உங்கள் கடன் உறுதி செய்யப்பட்டது என்பதுப் போன்ற ஒரு போலி குறுஞ்செய்தியை தொலைப்பேசி எண்ணுக்கு அனுப்பியுள்ளனர். அதன் பிறகு உங்கள் வங்கியில் குறைந்த பட்ச தொகை 50 ஆயிரத்திற்கு மேல் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வரும் என கூறியுள்ளனர்.

இதனைடுத்து வங்கி கணக்கில் அதிகத் தொகையை வைப்பு நிதியாக வைத்திருந்த பொதுமக்களின் வங்கி பணத்தை அவர்களுக்கே தெரியாமல் அவர்களது வங்கி விவரங்களைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர். இதில் பலர் ஏமாந்திருப்பதாக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தற்போது வரை 100-க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

பின்னர், போலிஸார் நடத்திய விசாரனையில் இந்த கும்பலைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் தொடர்புடைய அங்கு பணியாற்றிய 6 பெண்கள் உட்பட 12 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. வேலையில்லாததால் விளம்பரம் பார்த்து வேலைக்குச் சென்றார்கள் என அவர்களின் குடும்பத்தினர் போலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

12 பேரையும் கைது செய்த போலிஸார் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரத்து வருகின்றனர். இதில் மேலும் தொடர்புடைய பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முழுமையான விசாரனைக்கு பிறகே எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பது தெரியவரும் என போலிஸார் தரப்பில் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.