Tamilnadu

தாய் வீட்டுக்கு வந்த இளம்பெண் டெங்குவால் பலி : சுகாதார சீர்கேட்டால் சென்னையில் அவலம்!

சென்னை திருவொற்றியூரில் தாய் வீட்டிற்கு வந்த மகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் ஜீவன்லால் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி; இவர்களது மகள் பவானி ( 25). பவானிக்கும் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த காவலர் சீனிவாசன் என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அஸ்விதா (2) என்ற மகள் உள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பவானி திருவொற்றியூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பவானிக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பவானியை அனுமதித்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் செல்லும் வழியிலேயே பவானி பரிதாபமாக உயிரிழந்தார். பவானியின் தாய் ராமலட்சுமிக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால் அவரும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாய் வீட்டுக்கு வந்த இளம்பெண் டெங்குவால் பலியாகியிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் சுகாதார நடவடிக்கையை சரிவர மேற்கொள்ளாததே டெங்குவால் இளம்பெண் உயிரிழந்ததற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.