Tamilnadu

சென்னையில் 390 பேருக்கு டெங்கு பாதிப்பு : மாநகராட்சி அதிகாரி தகவல்!

சென்னை மாநகர பகுதிகளில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி சுகாதாரத் துறை துணை ஆணையர் மதுசூதனன் ரெட்டி நடப்பு ஆண்டில் 390 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது என்றும், கடந்த மாதத்தில் மட்டும் 90 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மேலும், டெங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்த கட்டடங்களுக்கு 32 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்றும் மதுசூதனன் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், தமிழகத்துக்கு வருகை தரும் மோடிக்கு பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது அதிமுக அரசு. இந்தச் செயல் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.