Tamilnadu

டாஸ்மாக்கில் கவனம் செலுத்தும் அரசு, பள்ளிகளை மேம்படுத்துவதில் அலட்சியமாக செயல்படுவதா?- ஐகோர்ட் கேள்வி!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என மாணவி அதிகை முத்தரசியும், அவரது தந்தை பாஸ்கரனும் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், கோவில் ஒன்றை ஒட்டி செயல்பட்டு வரும் பள்ளி வளாகம், பிச்சைக்காரர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது எனவும், சுகாதாரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பள்ளியை புதுப்பிக்கவும் வேண்டுமென்று கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இருவரும் அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் சேஷசாயி அமர்வு, டாஸ்மாக் கடைகளுக்கான இடங்களை தேர்வு செய்வதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் ஏன் அலட்சியமாக செயல்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், உதவி தொடக்க கல்வி அதிகாரி ஆகியோர் வரும் அக்டோபர் 16ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.