Tamilnadu
பேராசிரியர்களின் அசல் சான்றிதழை திருப்பித் தரும் அண்ணா பல்கலை உத்தரவு ரத்து - உயர்நீதிமன்றம் ஆணை!
தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அசல் சான்றிதழ்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதில், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து பெற்ற அசல் சான்றிதழ்களை சரிபார்ப்புக்குப் பின் உடனடியாக திருப்பி ஒப்படைத்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பாணையை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் அசல் சான்றிதழ்களை ஆசிரியர்களிடம் திரும்ப ஒப்படைத்தால், கல்வியாண்டின் இடையே ஆசிரியர்கள் வேறு கல்லூரிக்கு மாறி விடக்கூடும் எனவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்பதால் பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அகில இந்திய தொழில்நுட்பகல்விக் கவுன்சில் அனுப்பிய சுற்றறிக்கையின் அடிப்படையிலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தனியார் பொறியியல் கல்லூரிகள், தங்களிடம் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ராஜினாமா செய்யும்போது அவர்களது அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பகல்விக் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும்படியும் அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.
மேலும், அகில இந்திய கல்விக் கவுன்சில் உத்தரவுக்கு ஏற்ப புதிய சுற்றறிக்கையை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!