Tamilnadu

அ.ம.மு.க-வில் இருந்து விலகியவர் மீது கொலைவெறித் தாக்குதல் : கட்சி நிர்வாகி மீது வழக்குப்பதிவு

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுகுமார். டி.டி.வி தினகரன் கட்சியான அ.ம.மு.க.வில் முன்னாள் வேளச்சேரி மாநகராட்சி உறுப்பினர் சரவணன் என்பவருடன் சேர்ந்து கட்சியில் அவரோடு வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக, அவரிடம் வேலை செய்ய பிடிக்காததால் அ.தி.மு.க வேளச்சேரி பகுதி செயலாளர் மூர்த்தி என்பவர் கீழ் அ.தி.மு.க-வில் இணைந்து பணியாற்றத் துவங்கியுள்ளார்.

நேற்று வேளச்சேரி குருநானக் கல்லூரியில் அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சியில் சுகுமார் பங்கு பெற்றதை பார்த்த, அ.ம.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் வேளச்சேரி கவுன்சிலர் சரவணன் செல்போனில் சுகுமாரை மிரட்டியுள்ளார். தனக்கு ஆகாதவர்களுடன் சேரக் கூடாது எனவும் மீண்டும் அ.ம.மு.க-வில் இணைய வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.

சுகுமார் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆட்களை வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். தாக்கியதில் காயமடைந்த சுகுமார் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சுகுமாரின் தாய் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதோடு, வேளச்சேரி முன்னாள் கவுன்சிலர் சரவணன் மிரட்டிய ஆடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளார். இதுகுறித்து போலிஸார் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.