Tamilnadu

நிதி வசூலிப்பது போல பேசி கடைகளில் செல்போனை அபேஸ் செய்த மர்ம நபர் : அருப்புக்கோட்டையில் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள கடைகளில் நூதன முறையில் மர்ம நபர் ஒருவர் செல்போன்களை மட்டும் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அருப்புக்கோட்டை பகுதிகளில் அமைந்துள்ள கடைகளுக்குச் சென்ற மர்ம நபர் ஒருவர், ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நிதி திரட்டுவது போன்று கடை உரிமையாளர்களுடன் பேச்சுக் கொடுக்கிறார்.

அப்போது அவர்களிடம் சில தாள்களை காண்பித்து பேச்சுக் கொடுத்துக்கொண்டே லாவகமாக மேஜை மீது வைக்கப்பட்டிருக்கும் செல்போனை எடுத்துச் செல்கிறார்.

இவ்வாறு நூதன முறையில் செல்போன்களை திருடும் அந்த மர்ம நபரின் செயல்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகள் வாட்ஸ் அப் மூலம் சமூக வலைதளங்ளில் பரவி வந்த நிலையில், தாமாக முன்வந்து அருப்புக்கோட்டை நகர போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக இந்த திருட்டுச் சம்பவம் குறித்து இதுகாறும் எவரும் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.