Tamilnadu

உணவு எடுத்து வரும் டெலிவரி பாய்களிடம் திட்டமிட்டு கொள்ளை : 1 வருடமாக கைவரிசை காட்டிய ‘பலே’ கொள்ளையன்!

சென்னையில், உணவு ஆர்டர் கொடுக்க வரும் டெலிவரி பாய்களிடம் செல்போனை நூதன முறையில் கொள்ளையடிக்கும் கொள்ளையன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையை அடுத்த அக்கரை பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் 1,100 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து உணவை டெலிவரி செய்ய சஞ்சய் என்ற இளைஞர் சென்றுள்ளார்.

குறிப்பிட்ட முகவரியில் இருந்த நபரிடம் உணவைக் கொடுத்துவிட்டு பணத்தை கேட்டுள்ளார். அந்த நபர் பக்கத்து தெருவில் இருந்த வீட்டை காட்டி, அது தன்னுடைய வீடுதான் என்றும் அங்கு சென்று பணத்தை வாங்கிக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

மேலும், தனது மொபைல் போன் சுவிட்ச்-ஆஃப் ஆகிவிட்டதாகவும், உங்கள் மொபைலை கொடுத்தால் வீட்டில் இருக்கும் தனது உறவினர்களிடம் பேசி பணம் கொடுக்கச் சொல்வதாகவும் கூறியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்டு வரும்போது போனை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் கூறியதை நம்பிய டெலிவரி பாய் சஞ்சய், தனது மொபைல் போனை அந்த நபரிடம் கொடுத்துவிட்டு அவர் சொன்ன வீட்டுக்குச் சென்று பணத்தைக் கேட்டுள்ளார். அந்த வீட்டில் இருந்தவர்கள் நாங்கள் உணவு எதுவும் ஆர்டர் செய்யவில்லை எனக் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சய், மீண்டும் உணவு பார்சல் கொடுத்த வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அந்த நபர் மொபைல் போன் மற்றும் உணவுடன் மாயமாகிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, சஞ்சய் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இதேபோல, உத்தண்டி அருகே உள்ள உணவகம் ஒன்றில் 2,100 ரூபாய்க்கு அப்பன் ராஜ்குமார் என்பவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதனை சுப்பையா என்ற டெலிவரி பாய் கொண்டு சென்றுள்ளார். அங்கிருந்த அப்பன் ராஜ்குமார் உணவைப் பெற்றுக்கொண்டு, அருகில் இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டு அதேபோல செல்போனை அவசரமாக பேசவேண்டும் என வாங்கியுள்ளார்.

முந்தைய கதையைப் போலவே, கெஸ்ட் ஹவுஸில் யாரும் ஆர்டர் செய்யவில்லை எனவும், திட்டமிட்டு சாப்பாட்டையும், செல்போனையும் கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பையா, இதுகுறித்து கானத்தூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இதையடுத்து, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து செல்போனை கொள்ளையடிக்கும் நபரை பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். ராஜ்குமாரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு வருடமாக இதுபோன்று செல்போனை திருடி விற்று வந்தது தெரியவந்துள்ளது.