Tamilnadu

நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக கனிமொழி... பல்வேறு துறை குழுக்களில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,கள் நியமனம்!

இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளுக்கான நாடாளுமன்ற குழுக்களை பா.ஜ.க அரசு அமைத்துள்ளது. அதில், தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்களும் இடம்பெற்றுள்ளனர்.

முதலாவதாக ரசாயனம் மற்றும் உரத்துறைக்கான நாடாளுமன்ற குழு தலைவராக தி.மு.க மக்களைவை துணைத் தலைவர் கனிமொழி எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நியமிக்கப்படுள்ள அதே குழுவில் காங்கிரஸ் எம்.பிக்கள் ஹெச்.வசந்தகுமார், விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், வேளாண்துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, ம.தி.மு.க எம்.பி., கணேசமூர்த்தி, அ.தி.மு.க எம்.பி., வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

அதனையடுத்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழுவில் பா.ம.க எம்.பி., அன்புமணி ராமதாஸ், புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன் நிலக்கரி மற்றும் எஃகு உற்பத்தித் துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

அதேபோல், பாதுகாப்புத் துறைக்கான நிலைக்குழு உறுப்பினராக தி.மு.க எம்.பி., கலாநிதி வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தகத் துறைக்கான நிலைக்குழு உறுப்பினராக தி.மு.க எம்.பி., கதிர் ஆனந்த், சண்முக சுந்தரம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊரக வளர்ச்சித்துறை நிலைக் குழு உறுப்பினராக ஏ.கே.பி சின்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு துறைக்கான நாடாளுமன்ற குழுவில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் நவநீத கிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.