Tamilnadu

குடி போதையில் ரயில் மீது ஏறி கூச்சலிட்ட இளைஞர்: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, இன்று காலை 9.40 மணிக்கு மதுரைக்கு செல்லும் பாண்டியன் அதி விரைவு வண்டி புறப்பட பிரயத்தனமானது.

அப்போது, 28 வயதுடைய இளைஞர் ஒருவர் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் ரத்தம் வழிந்த நிலையில் ரயிலின் மேற்கூரையில் ஏறி நின்று தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கூச்சலிட்டார். மேலும், அதி மின்சாரம் பாயும் கம்பியையும் தொடர் முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த ரயில்வே போலிஸார், அந்த நபரை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர். பின்னர் அந்த இளைஞர் மது போதையில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

பிறகு, ரயில் நிலையத்திலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது மாதவரத்தைச் சேர்ந்த எம்.பி. பட்டதாரி கணேசன் எனவும், தன்னை கொலை செய்ய 50 பேர் விரட்டி வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

அவர் பேசும் போது ஏதோ மனநிலை சரியில்லாதவர் போன்று தெரிந்ததால் முதலுதவி செய்து முடித்தவுடன் கணேசனிடம் மீண்டும் விசாரணை நடத்த போலிஸார் முடிவெடுத்துள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கணேசனை போலிஸார் அனுப்பி வைத்தனர். ரயில் கூரையின் மீது ஏறி கூச்சலிட்டதால் எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபர்ப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.