Tamilnadu

போக்குவரத்து அபராதத் தொகையை குறைக்க தமிழக அரசு திட்டம்?

மத்திய அரசு மேற்கொண்ட மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் கடந்த செப்.,1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

போக்குவரத்து விதிமீறலை தடுக்கவும், சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும் மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவந்து கடுமையான அபராதங்களை விதிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டது.

இந்த புதிய சட்டம், தென் மாநிலங்களை விட, வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா, டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய நகரங்களில் வருமானத்தை மீறி போலிஸார் அபராதம் விதிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் பன்மடங்கு அபராதம் உயர்ந்ததால் தினந்தோறும் வாகன ஓட்டிகளுக்கும், போலிஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அபராத தொகையை அம்மாநில அரசு குறைத்துள்ளது.

அதன்படி, ஹெல்மெட் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதம் 1000 ரூபாயில் இருந்து 500 ஆகவும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாயில் இருந்து 2 ஆயிரமாகவும், கார் ஓட்டுபவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது.

ஆகையால், குஜராத் அரசை போல அபராதத் தொகையை குறைத்து அதற்கான சட்டத்திருத்தத்தை மேற்கொண்ட பின்னர் தமிழகத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு நடைபெற்றால், அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.