Tamilnadu

ஸ்ரீநகரில் 11ம் வகுப்பு மாணவரின் உயிரைப் பறித்த பெல்லட் குண்டுகள் : எக்ஸ்-ரே ரிப்போர்ட்டால் அதிர்ச்சி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றியது.

அதுமட்டுமின்றி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தையே ராணுவத்தின் பிடியில் கொண்டுவந்து, திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிய மோடி அரசு அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது.

மேலும், மாநிலம் முழுவதையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டு வளையத்தில் வைத்துவிட்டு, மக்கள் நிம்மதியாக, வழக்கமான நடைமுறை வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்ற பொய்யை பா.ஜ.க தலைவர்கள் பேசிவந்தனர். மேலும் ,அரசுக்கு எதிராக போராடுபவர்கள் சிறையில் தள்ளப்படுவதாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாயின.

மாணவர் அஸ்ரர் அஹமட் புதைக்கப்பட்ட இடம்

அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர் மீது பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதாகவும் அதில் சிலர் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை பா.ஜ.க அரசு மறுத்து வந்த நிலையில், 11ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பிற்கு பெல்லட் குண்டு தாக்குதலும் காரணம் என மருத்துவ அறிக்கை ஆதாரம் வெளிவந்துள்ளது.

ஸ்ரீநகர் எலாஹிபாக் பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் அஸ்ரர் அஹமத் கான். இவர் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்ததாக ஷெர் இ காஷ்மீர் மருத்துவ விஞ்ஞான கழகத்தில் பாதுகாப்புப் படையினரால் சேர்க்கப்பட்டார்.

போராட்டத்தின் போது ஏற்பட்ட கல்வீச்சில் தான் மாணவர் உயிரிழந்ததாக போலிஸார் கூறி வந்தனர். ஆனால் மாணவரின் பெற்றொர் பெல்லட் குண்டுகளினால் ஏற்பட்ட காயத்தினால்தான் தங்கள் மகன் உயிரிழந்ததாகக் குற்றம்ச்சாட்டினர். இந்நிலையில் மாணவர் மரணத்திற்கு பெல்லட் குண்டு தாக்குதலே காரணம் என ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

எக்ஸ்-ரே ஆதாரம்

இதுதொடர்பாக மருத்துவமனை ஆவணங்களில் “மாணவர் அஸ்ரர் அகமத் ஆகஸ்ட் 6ம் தேதி இரவு 6.46 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு உடனடியாக எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது. அதில் தலை, கண் உள்ளிட்ட சில இடங்களில் பெல்லட் குண்டுகள் பாய்ந்தது தெரியவந்துள்ளது. மேலும் அனுமதி பதிவேட்டிலும் 'சர்ஜிக்கல் எமர்ஜென்சி’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழப்பு குறித்த முழுமையான மருத்துவ அறிக்கை விவரங்கள் இன்னமும் தெரியவரவில்லை. அதனை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஜம்மு - காஷ்மீர் ஆளுநர், பெல்லட் குண்டுகளை பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.