Tamilnadu

மோசடி வழக்கில் பிக்பாஸ் கவினின் குடும்பத்தினருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை: தொடரும் பிக்பாஸ் சர்ச்சைகள்! 

சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த வழக்கில் பிக்பாஸ் போட்டியாளர் கவின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி கே.கே.நகரில் கவினின் தாய் ராஜலட்சுமி, அவரது தாத்தா அருணகிரி, பாட்டி தமயந்தி, மாமா சொர்ணராஜன் உள்ளிட்டோர் இணைந்து கடந்த 1998ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

இந்தச் சீட்டு நிறுவனத்தில் பணம் கட்டி வந்த 34 பேர், தாங்கள் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாகவும் ஆனால் தங்கள் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சொர்ணராஜன், அருணகிரி ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது குற்றம் நிரூபிக்கப் பட்டதையடுத்து தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமிக்கு மோசடி வழக்கில் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதமும், சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் புகார் அளித்தவர்களில் பணம் செலுத்தியதற்கான ஆவண ஆதாரங்களை காண்பித்த 29 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அந்தத் தொகையை வழக்கு தொடர்ந்த 2007ம் ஆண்டு முதல் 5 சதவிகித வட்டி விகிதம் கணக்கிட்டு ரூ.55.10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் கட்டத் தவறினால் குற்றவாளிகளின் சொத்தைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னணி போட்டியாளரான கவின் குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த சீசன் பிக்பாஸ் நிறைய சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது.

பிக்பாஸில் இருந்து நடிகர் சரவணன் வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலை முயற்சி, வனிதா மற்றும் மீரா மிதுன் ஆகியோரிடம் போலிஸ் விசாரணை எனத் தொடர்ந்து தற்போது போட்டியாளர் கவினின் குடும்பத்தினருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.