Tamilnadu

4 வயது சிறுவனின் உயிரை பறித்த ஜெல்லி மிட்டாய் : தாயின் கண்முன்னே நிகழ்ந்த சோகம்- மருத்துவர்கள் எச்சரிக்கை

பெரம்பலூரில் உள்ள ஆலம்பாடி சாலை பகுதியில் வசித்து வருபவர்கள் தர்மராஜ் - சசிதேவி தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் ரங்கநாதன் என்று மகன் உள்ளான். இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) சிறுவன் ரங்கநாதன் தனது தாயிடம் தின்பண்டம் கேட்டு அடம்பிடித்துள்ளான். இதனையடுத்து, தாய் சசிதேவி அருகில் உள்ள கடையில் இருந்து ஜெல்லி மிட்டாய் வாங்கி கொடுத்துள்ளார்.

அதை எப்படி சாப்பிடுவது என தெரியாத சிறுவன் டப்பாவில் இருந்த ஜெல்லி முழுவதையும் அப்படியே வாயில் போட்டுள்ளான். ஜெல்லி சிறுவனின் தொண்டைக்குழிக்குள் சென்று அடைத்துக் கொண்டதால் மூச்சுத்திணறி தாயின் கண் முன்னே மயங்கி விழுந்தான்.

சிறுவன் ரெங்கநாதன்

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் சசிதேவி, சிறுவனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் மூச்சுத்திணறலால் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை கேட்டதற்காகத் தாய் வாங்கிக்கொடுத்த ஜெல்லி மிட்டாய் சிறுவனின் உயிரை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற உணவுப் பொருட்களை தகுந்த எச்சரிக்கையோடு கடைக்காரர்கள் விற்பது இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு இதுபோன்ற தின்பண்டங்களை கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் பெற்றோருக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.