Tamilnadu

காலி சட்டமன்ற தொகுதிகள் - செப்டம்பர் மாதம் வருகிறது அடுத்த தேர்தல்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸின் எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றதை அடுத்து நாங்குநேரி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது

கடந்த ஜூன் மாதம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக் குறைவால் காலமானதால் இந்த தொகுதியும் காலியானது.

வேலூர் மக்களவைத் தொகுதியோடு இவ்விரு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் வேலூருக்கு மட்டும் ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேலூர் தேர்தலையடுத்து, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வட கிழக்கு பருவமழை காலமாக இருப்பதாலும், அது பண்டிகை காலம் என்பதாலும், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு செப்டம்பர் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.