Tamilnadu
பட்டாக்கத்தி தூக்கிய மாணவர்களுக்கு மாவுக்கட்டு : என்ன நடக்கிறது காவல்துறையில்?!
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. கடந்த ஜூலை 23ம் தேதி சென்னை பூந்தமல்லி சாலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் கையில் பெரிய பட்டாக்கத்திகளை வைத்துக் கொண்டு, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களை பேருந்தில் வெட்டியுள்ளனர்.
‘ரூட்டு தல’ யார் என்பதில் எழுந்த பிரச்னையால் இந்த மோதல் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 7 மாணவர்களுக்கு வெட்டுக்காயம் ஏற்படுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மாணவர்களின் புகைப்படம் வெளிவந்துள்ளது. அந்தப் புகைப்படத்தில் இருக்கும் மாணவர்களின் கைகளில் பெரிய கட்டு போடப்பட்டிருக்கிறது. போலீசார் அவர்களை கடுமையாகத் தாக்கி கையை உடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
யார் குற்றவாளியாக இருந்தாலும் அவர்களுக்கு நீதிமன்றம் தான் தண்டனை வழங்கவேண்டும். அதற்கு மாறாக விசாரணையின்போதே காவல்துறை குற்றவாளிகளை தண்டிப்பது சட்டவிரோதம் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்ட அவர்களை தாக்கியதில் தவறில்லை என போலீசாரை ஆதரித்தும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து இதுபோல செயின் பறிப்பு, வாகனத்திருட்டு, போலீஸ் அதிகாரிகளிடம் தகராறு செய்பவர்கள் அனைவரின் புகைப்படமும் போலீசார் மூலமாகவே வெளிவருகின்றன. எல்லாப் புகைப்படங்களிலும் அவர்களின் கைகளில் கட்டுப்போடப்பட்டுள்ளது. இதற்கு, வழுக்கி விழுந்தது போன்ற சில்லறைக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. முன்னதாக அவர்கள் குற்றச்செயலில் ஈடுபடும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் பரவுகின்றன. நீதிமன்றத்தில் சமர்பிக்கவேண்டிய ஆதாரங்களை போலீசார் கசிய விடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதுபோன்ற தவறுகள் செய்பவர்களை பெரிய குற்றவாளியாகச் சித்தரித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினாலும் தவறில்லை என்ற மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு போலீசார் முயற்சிப்பதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !